வரலாறு காணாத வீழ்ச்சியில் கொகோ கோலா...
கொரோனா பயத்தால் குளிர்பானங்களை தவிர்த்த மக்கள்... வரலாறு காணாத வீழ்ச்சியில் கொகோ கோலா
கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொகோ கோலா நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்பனை 16 % அளவுக்குக் குறைந்துள்ளது.
கொகோ கோலா நிறுவனத்துக்கு இந்தியாதான் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்தியாவில் கோடைக்காலமான, ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை விகிதம் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டமாகிய இரண்டாவது காலாண்டில் பல மடங்கு அதிகரிக்கும்.
ஆனால், இந்த ஆண்டு கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் கொரோனா அச்சத்தால் குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்கவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதனால், ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் கொகோ கோலா நிறுவனத்தின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் விற்பனை 12 % சரிந்துள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது காலாண்டு அறிக்கையில், உலகளவில் கொரோனா வைரஸ் பரவலால் குளிர்பானங்கள் விற்பனை 16% அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் அதன் நிகர வருமானம் 28 % அளவுக்கு சரிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆசியா - பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதியில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை 24 % அளவுக்கு சரிந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் மட்டும் இந்தியாவில் ரூ. 20,000 கோடி அளவுக்கு குளிர்பானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment