தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு



"அருட்பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி” தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப் படுகிறது. முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய நாள் வடலூரில் வள்ளலாருக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்புப் பூசனைகளும் அன்னதானமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. 'ஒளிக் காட்சி காண மக்கள் அலை அலை யாக வடலூருக்கு வருகை தருவார்கள். கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867ஆம் ஆண்டு, மே மாதம் 23ஆம் நாளன்று அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருப்பது விந்தை தரும் செய்தி. | தனிமையை விரும்பிய வள்ளலார், | வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள் பயன்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கி னார். அந்த இடத்துக்குச் 'சித்தி வளாகத் திருமாளிகை' என்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி 'பிரமதண்டிகா யோகம்' செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து 'தியானத்தில்' இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் உடலை வெப்ப உடலாக ஆக்கி வந்தார். | இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை' என்று பெயர் சூட்டினார். 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது. வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப்பார்க்க இசைவளிக்கப்படு கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்து விடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி,  நல்ல நெறியை அடையும்போது நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஒளிக்காட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை , கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படும். திரைகள் விலகியதும் '' அனல் பிழம்பாக ஒளிக்காட்சி” கண்ணாடியில் கண்டதும் நம் உள்ளே கண்டிப்பாக அதிர்வு ஏற்படும். அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கிறது. அந்தத் தீபத்தின் எதிரொலியே' ஒளி' ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கடந்த நான்கு வருடங்களாகச் சூழ்நிலையின் காரணமாகச் சிதம்பரத்தில் வசிக்கும் பேறு பெற்றேன். அப்போது வடலூரில் வள்ளலாரின் " ஒளிக்காட்சி காணும் பேறு பெற்றேன். ஒவ்வொருமுறை அங்கு செல்லும் போதும் மக்களின் கூட்டத்தையும், அங்கு அன்னதானம் நடத்தும் பாங்கையும் கண்டேன். மூட்டை மூட்டையாக அரிசியையும், பருப்பையும் கொண்டு வந்து குவிப்பார்கள் அன்பர்கள். இதைக் காணும் போது நம்மையும் அது போலச் செய்யத் தூண்டும். பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை நோன்பாகவே எடுத்துக் கொள்ளத் தூண்டும். தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபையைப் பார்த்துவிட்டு வாருங்கள். அங்கு வள்ளலார் இயற்றிய 'திருவருட்பா' வும் 'மகாதேவமாலை' யும் பளிங்கில் செதுக்கியிருக்கும் அழகைப் பார்த்தால் கண்கள் பனிக்கும் .வெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொண்டு தானே ஒளியாக நின்ற பெருமான் நமக்கு அருளியிருப்பது பல நல்ல செய்திகள். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை .என்பதைப் பொய்யாக்க்கும் பெரும் பொறுப்பு தற்போது நம்மிடம் உள்ளது. தைப்பூச நாளில் காலை 6.30,10.00 மதியம் 1.00 இரவு 7.00, 10.00 மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறுகாலங்களில் ஒளிக்காட்சி நடைபெறும். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.